சிறீலங்கா அரசின் உளவியல் போரை முறியடித்து இலண்டன் தேசிய நினைவெழுச்சி நாளில் 50,000க்கு மேற்பட்ட மக்கள்

 

இலண்டனிலுள்ள மிகப்பெரிய உள்ளரங்கமான எக்செல் கண்காட்சி மையமே இடம்பற்றாமல் நிரம்பி வழிய ஐம்பதாயிரத்திற்கும் அதிகமான மக்கள்  தமது தேசிய நினைவெழுச்சி நாளை உணர்வுபூர்வமாக அனுட்டித்தனர். காலை 11மணிக்கு உள்ளரங்கக் கதவுகள் திறக்கப்படுமுன்பே 8,000ற்கும் மேற்பட்டோர் வெளியே காத்திருந்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் உரை பிரமாண்டமான திரைகளில் காண்பிக்கப்பட்டது. அவ்வுரையில் அவர் தற்சமயம் எம்மக்கள் சந்தித்துள்ள அழிவுகளையும், பின்னடைவுகளையும் மட்டும் நினைவுகூராது இது  புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் தம் கூட்டாற்றலைக் கொண்டு தம்மினத்தின் இலட்சியப்பயணத்தை மேலும் பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் என்பதையும் நினைவூட்டினார்.

தேசிய நினைவெழுச்சி நாளுக்கான பொதுச்சுடரினை ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகம் முன் தன்னை ஆகுதியாக்கிய முருகதாசனின் தந்தையான வர்ணகுலசிங்கம் அவர்கள் ஏற்றி வைத்தார். மணியொலி மற்றும் அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச்சுடரை மாவீரன் சுதுவின் தாயார் திருமதி ரமணி சதானந்தன் அவர்கள் ஏற்றிவைத்தார். இத்தருணத்தில் ஏறத்தாள 20,000 மக்கள் அரங்கத்துள் இருக்க உள்ளேவர இடமில்லாமல் திரள் திரளாக வெளியேயும் ஆயிரக்கணக்கானோர் காத்திருந்தனர்.

தொடர்ந்து உணர்வு மிக்க துயிலுமில்லப் பாடலும் தீபவணக்கமும் அதன்பின் மலர்வணக்கமும் இடம்பெற்றது. மலர்வணக்கம் செய்தோரை முடியுமாயின் உள்ளரங்கத்தை விட்டு வெயியேறி வாயிலுக்கு வெளியில் ஆயிரக் கணக்கில் காத்திருப்போரும் தமது வணக்கத்தைத் தெரிவிக்கச் சந்தர்ப்பம் அளிக்குமாறு வேண்டுகோள் விடுக்கும் நிலைக்கு ஒழுங்கமைப்பாளர்கள் தள்ளப்பட்டனர். நான்கு மணித் தியாலங்களுக்கு மேலாக மக்கள் பொறுமையாக வரிசையில் நின்று மலரஞ்சலி செலுத்தியதைக் காணக்கூடியதாக இருந்தது.

நிகழ்வின்போது பிரித்தானிய அரசியல்வாதிகள் பலர் உரையாற்றினர். தொழிற்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களான பரி கார்டினர,; சிவோன் மக்டொனா, விரேந்திர சர்மா, ஜோன் மக்டொனல் டொன் பட்லர் லிபரல் சனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுசான் கிரேமர், பழமைவாதக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட் ஆகியோருடன் வருகின்ற பிரித்தானியப் பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளர்களாகப் போட்டியிடவுள்ள பழமைவாதக் கட்சியின் கலாநிதி ரேச்சல் ஜோய்ஸ், டேவிட் கோல்ட், டோபி பூட்ல், அன்ட்ரூ கரலம்பெஸ் மற்றும் தொழிற்கட்சியின் கைடி அலெக்ஸாண்டர் ஆகியோரும் உரையாற்றினர். இதன்மேலாகச் சில உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும்  தமிழ் மக்களின் போராட்டத்திற்கான தமது ஆதரவைத் தெரிவித்தனர். சிறப்புரையினை தமிழ் நாட்டிலிருந்து வருகை தந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும் தமிழின உணர்வாளருமான பேராசிரியர் தீரன் அவர்கள் ஆற்றினார். இயக்குனர் சீமானின் விசேட உரையொன்றும் ஒளிபரப்பப்பட்டது.

முள்ளிவாய்க்காலிலும் முட்கம்பி வேலிக்கு பின்னாலும் எம் மக்கள் அநுபவித்த அநுபவிக்கின்ற துன்பங்கள் மேடையில் அரங்க நிகழ்;வாக விரிந்த போது மக்கள் மிகவும் உணர்வு மயமானார்கள். இடையிடையே மாவீர கானங்களும் உணர்வு பூர்வமாக இசைக்கப்பட்டது.

இவ்வாண்டின் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வின் போது இளைய சந்ததியினருக்கு அறிவூட்டுமுகமாக நடாத்தப்பட்ட மாவீரர் நினைவு கலைத் திறன்  போட்டிகளில்; வெற்றியீட்டியோருக்கான பரிசளிப்பு நிகழ்வும் 2010 ஆம் ஆண்டிற்கான முரச வெளியீடும் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கில்  பாடசாலை மாணவர்கள் தமது தேசப் புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்த வந்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 6 மாதமாக புலம் பெயர் தமிழ் மக்களின் எழுச்சியை மழுங்கடிக்க சிறீலங்கா அரசும் தமிழின விரோதிகளும் எடுத்த கடும் முயற்சியை மக்கள் முன்பை விடவும் உறுதியாகவும் உணர்வாகவும் தேசிய நினைவெழுச்சி நாளில் முறியடித்தார்கள். இறுதியில் எந்தக் கனவுகளுக்காக களமாடி எம் மாவிPரர்கள் வித்தானார்களோ அந்தக் கனவுகளுக்காக நாம் உண்மையாக உழைப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் உண்மையான வணக்கமாக இருக்கும் என்பதை வெளிப்படுத்தி உறுதிமொழி எடுத்து நிகழ்வுகள் யாவும் 6.30 மணியளவில் நிறைவுபெற்றன.

(புகைப்படங்களுக்கு கீழ்காணும் இணையமுகவரிக்குச் செல்லவும்

http://www.sendspace.com/file/fplmuz

File Name: herosday2009.zip)

.

Comments





(To type in English, press Ctrl+g)